அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுப் பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்பட்டு வந்த வைத்தியலிங்கம், மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட வைத்தியலிங்கம் பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்பட்டுவந்தார். அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று கூறியதற்காகச் செங்கோட்டையன் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டு விட்டார். இந்நிலையில் பன்னீர்செல்வத்தை அதிமுகவிலோ தேசிய ஜனநாயகக் கூட்டணியிலோ சேர்த்துக்கொள்ள முடியாது என்று எடப்பாடி பழனிச்சாமி உறுதியாகக் கூறிவிட்டார்.
இந்நிலையில் செங்கோட்டையன், ஜே.சி.டி. பிரபாகர் ஆகியோர் தமிழக வெற்றிக் கழகத்தில் சேர்ந்துவிட்டனர்.
மனோஜ்பாண்டியன் சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகித் திமுகவில் சேர்ந்துவிட்டார். பன்னீர்செல்வத்துடன் இருந்த கடைசி ஆளான வைத்தியலிங்கம் ஒரத்தநாடு தொகுதியில் இருந்து அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
அவர் சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து இன்று விலகினார்.
இதையடுத்துத் திமுக தலைமையகத்தில் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய வைத்தியலிங்கம், கூட்டணி தொடர்பாக முடிவெடுக்கப் பன்னீர்செல்வம் தாமதம் செய்ததால் திமுகவில் இணைந்ததாகத் தெரிவித்தார்.




