
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த வாணியாறு அணையில் இருந்து பாசனத்திற்குத் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த வாணியாறு அணை முழுக் கொள்ளளவான 65 அடி நிரம்பியுள்ளது. இந்நிலையில் நெல், கரும்பு, வாழை, மரவள்ளிக்கிழங்கு ஆகியவற்றைப் பயிரிட்டுள்ள விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வாணியாறு அணையில் இருந்து மாவட்ட ஆட்சியர் சதீஷ் பாசனத்திற்குத் தண்ணீர் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, நீர்வளத்துறைச் செயற்பொறியாளர் செந்தில் குமார், உதவிப் பொறியாளர் கிருபா ஆகியோர் கலந்து கொண்டனர்.புதிய ஆயக்கட்டுப் பகுதிகளுக்குச் சுழற்சி முறையில் இன்று முதல் 55 நாட்களுக்குத் தண்ணீர் திறந்து விடத் தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. நொடிக்கு 96 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
இதில் வலப்புறக் கால்வாயில் 51 கன அடியும், இடப்புறக் கால்வாயில் 45 கனஅடியும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதன்மூலம் ஆற்றின் இரு கரைகளிலும் உள்ள ஊர்களில் மொத்தம் பத்தாயிரத்து 517 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



