Cuddalore:இதற்காகத் தான் அதிமுக பிரமுகரைக் கொன்றோம்! சென்னையில் கைதானவர்கள் பகீர் தகவல்!

Advertisements

கடலூரில் அதிமுக பிரமுகர் மர்ம கும்பலால் ஓட ஓட விரட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாகச் சென்னையில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடலூர் முதுநகர் அருகே உள்ள வண்டிபாளையம் ஆலை காலனியைச் சேர்ந்தவர் புஷ்பநாதன் (45). அதிமுக மாவட்ட பிரதிநிதி மற்றும் முன்னாள் கவுன்சிலரான இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி மஞ்சுளா. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் இருசக்கர வாகனத்தில் புது வண்டி பாளையம் சூரசம்ஹாரத் தெருவில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரைப் பின்தொடர்ந்து வந்த 3 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்துள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த புஷ்பநாதன் இருசக்கர வாகனத்தை அங்கேயே போட்டுவிட்டு தப்பி ஓடினர். ஆனால் அந்தக் கும்பல் விடாமல் ஓட ஓட விரட்டிச் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த புஷ்பநாதன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்துப் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் புஷ்பநாதனின் உடலைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தக் கொலை சம்பவம் தொடர்பாகத் தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகளை தேடிவந்தனர். இந்நிலையில் தனிப்படை நடத்திய விசாரணையில் அஜய்(21), நேதாஜி(23) மற்றும் சந்தோஷ்(24) ஆகிய மூன்று பேரும் சேர்ந்து புஷ்பநாதனை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து சென்னையில் பதுங்கியிருந்த மூன்று பேரையும் போலீசார் சுற்றி வளைத்துக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது. அதில், நாங்களும் முன்னாள் கவுன்சிலர் புஷ்பநாதனும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள். அவர் ஆடு விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். இதனால், ஆடுகள் திருடி வந்து கொடுத்தால் பணம் தருவதாக ஆசைவார்த்தை கூறினார். இதனால் பலமுறை அவருக்கு ஆடுகள் திருடி வந்து கொடுத்தோம்.

ஆனால் சரிவரப் பணம் கொடுக்காமலும், குறைந்த அளவே காசு கொடுத்துள்ளார். மேலும் ஆடுகள் திருடும்போது நாங்கள் போலீசில் மாட்டிக்கொண்ட போதும் எங்களை ஜாமீனில் வெளியே எடுக்கவில்லை. இதனால் அவரைக் கொலை செய்யத் திட்டமிட்டோம். அதன்படி சனிக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் வரும்போது அவரை வழிமறித்து கொலை செய்தோம் என்று கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து கைதான மூன்று பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *