
மலேசியாவில் கோவிட் பரவல் அதிகரித்துள்ளது. கடந்த டிச.,16 அன்றுடன் முடிந்த ஒரு வாரக் காலத்தில் 20,696 பேர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கோலாலம்பூர்: மலேசியாவில் கடந்த டிச.,16 வரையிலான ஒரு வாரக் காலத்தில் 20,696 பேர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில், 60 வயதுக்கு மேற்பட்ட, இணை நோய் இருந்த 28 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, வைரஸ் பரவலை தடுக்க, முக கவசம், கைக்கழுவுதல், கூட்டமாக உள்ள இடங்களுக்குச் செல்வதை தவிர்த்தல் ஆகிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றும்படி அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சீனாவில் கடந்த 2019ல் கோவிட் வைரஸ் பரவத் துவங்கி மக்களைப் பாடாய் படுத்தி வந்தது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியது. பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் கோவிட் தடுப்பூசி உள்ளிட்டவற்றால் அந்த வைரஸ் பரவல் குறைந்தது.
தற்போது, மலேசியாவில் கோவிட் பரவல் அதிகரித்துள்ளது. கடந்த டிச.,16 அன்றுடன் முடிந்த ஒரு வாரக் காலத்தில் 20,696 பேர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 151 பேருக்கு மட்டும் தீவிர சிகிச்சை தேவைப்பட்டது. 91 பேருக்கு ஆக்ஸிஜன் உதவி தேவைப்பட்டது. 60 வயதுக்கு மேற்பட்ட, இணை நோய் இருந்த 28 பேர் உயிரிழந்தனர்.
கோவிட் தொற்று பரவலை தடுக்க அந்நாட்டு சுகாதார அமைச்சகம் வெளியிட்ட வழிகாட்டுதல்கள் பின்வருமாறு:
இருமல், சளி உள்ளிட்டவை இருந்தால் கோவிட் பரிசோதனை செய்ய வேண்டும். சோதனையில் கோவிட் தொற்று உறுதியானால் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றித் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும்.
நோய் பரவல் தடுக்க முக கவசம் (மாஸ்க்) அணிய வேண்டும்.சானிட்டைசரை பயன்படுத்தி அடிக்கடி கைகளைக் கழுவ வேண்டும். கோவிட் தொற்று உறுதியானவர்கள் 5 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தி கொள்வதை சுகாதாரத்துறை கண்காணிக்க வேண்டும்.
பொது இடங்களில் மாஸ்க் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.நெரிசலான இடங்களுக்குச் செல்வதை தவிர்க்க வேண்டும்.சமூக இடை வெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையைப் பின்பற்ற வேண்டும் என அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

