Arulmigu Devi Karumariamman Temple: கோவிலில் ரீல்ஸ் வீடியோ எடுத்த பெண் பணியாளர்கள் – பக்தர்கள் கடும் கண்டனம்!

Advertisements

பூந்தமல்லி: திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்ற அம்மன் தலங்களில் ஒன்றாகும். இந்தக் கோவிலுக்குத் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தினமும் வருகின்றனர். அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோவிலில் தற்போது கும்பாபிஷேகம் செய்வதற்காகப் பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் திருவேற்காடு தேவி கருமாரி அம்மன் கோவில் வளாகத்துக்குள் பெண் பணியாளர்கள் ஒன்று சேர்ந்து கருமாரி அம்மன் படத்திற்கு கீழே நாற்காலி போட்டு அமர்ந்துகொண்டு சமூக வலைத்தளங்களில் வரும் மீம்ஸ் ரீல்ஸ் போல வடிவேலு நடித்த படத்தின் காமெடி காட்சிக்கு நடித்துள்ளனர். அங்கிருந்த பக்தர்கள் வேடிக்கை பார்த்ததை கூட அவர்கள் பொருட்படுத்தாமல், நடிகர் வடிவேலு, கோவிலில் தான் பார்த்த வேலையை ராஜினாமா செய்வதுபோல் வசனம் பேசிக் கோவில் பணியாளர்கள் நடித்தனர்.

மேலும் அதே கோவில் வளாகத்தில் மற்றொரு வீடியோவில் ‘இதுபோலச் சொந்தம் தந்ததால், இறைவா வா நன்றி சொல்கிறோம், உனக்கேனும் சோகம் தோன்றினால், இங்கே வா இன்பம் தருகிறோம்’ என்ற பாடலுக்குக் கோவில் பணியாளர்கள் நடனம் ஆடியுள்ளனர். கோவில் வளாகத்திற்குள் கருவறை அருகே இத்தகைய காட்சிகளில் நடித்துள்ளனர்.

இந்த 2 வீடியோக்களும் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோக்களைப் பார்க்கும் பக்தர்களும், பொதுமக்களும் அவர்களுக்குக் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகிறார்கள். பக்தர்கள் புனிதமாகக் கருதும் திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவில் கருவறை அருகே இது போன்ற அநாகரிகமாக நடந்து கொண்ட இவர்கள்மீது அறநிலையத்துறையும், அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *