
Modi Israel PM: இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவிடம் தொலைபேசியில் உரையாடிய மோடி, பிராந்தியத்தில் அமைதி திரும்ப வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இஸ்ரேல்-ஹிஸ்புல்லா மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுடன் தொலைபேசியில் கலந்துரையாடியுள்ளார். மத்திய கிழக்கில் நடக்கும் வன்முறைகளைக் கண்டித்த பிரதமர் மோடி, பயங்கரவாதத்திற்கு உலகில் இடமில்லை என்றும், மேற்கு ஆசியாவில் அமைதியை சீக்கிரம் மீட்டெடுப்பதற்கான முயற்சிகளை ஆதரிப்பதில் இந்தியா உறுதிபூண்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாகப் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ” மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள சமீபத்திய நிகழ்வுகள்குறித்து பிரதமர் நேதன்யாகுவிடம் பேசினேன் . நமது உலகில் பயங்கரவாதத்திற்கு இடமில்லை. பிராந்திய விரிவாக்கத்தைத் தடுப்பதும், பணயக்கைதிகள் அனைவரையும் பாதுகாப்பாக விடுவிப்பதும் முக்கியம். அமைதி மற்றும் நிலைத்தன்மையை விரைவாக மீட்டெடுப்பதற்கான முயற்சிகளை ஆதரிப்பதில் இந்தியா உறுதியாக உள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.


