பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச்செயலகம் அமைவது முட்டாள்தனமான முடிவு என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.
சென்னை அண்ணா சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் உருவப்படத்திற்கு அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதன் பின்னர், அவர், செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் திட்டங்களை நிறைவேற்ற பணம் இல்லை என்று தவெக அரசு தொடர்ந்து கூறி வரும் நிலையில், ஆயிரத்து 200 கோடி ரூபாய் செலவில் புதிய தலைமைச்செயலகம் அமைப்பது அவசியமா என்று கேள்வி எழுப்பியுள்ளார். புதிய தலைமைச்செயலகம் அமையும் இடம் தங்களுடையது எனக் கூறி பூர்வகுடி மீனவர்கள் போராடி வருவதாகத் தெரிவித்தார்.
இதனால், சுற்றியுள்ள சுமார் 9 கிராமங்களைச் சேர்ந்த மீனவ மக்களின் வாழ்வாதாரம் நசுக்கப்படும் என்று கூறினார். இத்திட்டம் அமைவது முட்டாள்தனமான முடிவு என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார். கடும் எதிர்ப்புகள் எல்லாவற்றையும் மீறி இத்திட்டம் செயல்பட்டால் பிற்காலத்தில் தென் சென்னைக்கான சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மாறக்கூடும் என்று விமர்சித்தார். தமிழ்நாடு முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவுவதாகவும், அமைச்சர் செங்கோட்டையன் அவர் பேட்டி கொடுக்கும் போழுதே மின்வெட்டு ஏற்படுவதாகவும் சுட்டிகாட்டினார்.

