
பொதுவாக மழைக்காலம் வந்துவிட்டாலே சிறியவர் முதல் பெரியவர்வரை உள்ள மிகப்பெரிய பிரச்சனை என்றால் சளி, இருமல் மற்றும் தொண்டைவலி ஆகியவையாகும். இப்படி வரக்கூடிய சளி, இருமல் மற்றும் தொண்டைவலி ஆகியவற்றை போக்க உதவும் மருந்து குழம்பு வைப்பது எப்படி என்று பார்க்கலாம்…

மருந்து குழம்பு வைக்கத் தேவையான பொருட்கள்:
- மிளகு – 3 டேபிள் ஸ்பூன்
- சீரகம் – 3 டேபிள் ஸ்பூன்
- வெந்தயம் – 1 1/4 டீஸ்பூன்
- கருவேப்பிலை – 2 கைப்பிடி அளவு
- பூண்டு – 30 பல்
- சின்ன வெங்காயம் – 36
- காய்ந்தமிளகாய் – 8
- தேங்காய் துருவல் – 1/2 கப்
- கடுகு – 1/4 டீஸ்பூன்
- உளுத்தம்பருப்பு – 1/4 டீஸ்பூன்
- மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்
- தனியாத்தூள் – 4 டேபிள் ஸ்பூன்
- புளி – 2 எலும்பிச்சைப்பழம் அளவு
- நல்லெண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- தண்ணீர் – தேவையான அளவு

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி அதில் 3 டேபிள் ஸ்பூன் மிளகு, 3 டேபிள் ஸ்பூன் சீரகம், 1 டீஸ்பூன் வெந்தயம், 1 கைப்பிடி அளவு கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளுங்கள்.
இவையெல்லாம் நன்கு வதங்கியபிறகு அதனுடன் 10 பூண்டு பல், 8 காய்ந்தமிளகாய், 1/2 கப் தேங்காய் துருவல் மற்றும் 16 சின்ன வெங்காயத்தை நன்கு வதக்கிக் கொள்ளுங்கள். அனைத்தும் நன்கு வதங்கியபின்னர் அடுப்பிலிருந்து இறக்கி சிறிது நேரம் ஆறவிடுங்கள்.
அதன் பிறகு ஒரு மிக்சி ஜாரில் ஆற வைத்துள்ள பொருட்களைப் போட்டு நன்கு பசைப் போல் அரைத்துக் எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு நாம் எடுத்துவைத்துள்ள புளியை சிறிதளவு தண்ணீர் ஊற்றிக் கரைத்து வைத்துக்கொள்ளுங்கள்.

பின்னர் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி அதில் 1/4 டீஸ்பூன் கடுகு போட்டுக் கடுகு பொரிந்தவுடன் 1/4 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு, 1/4 டீஸ்பூன் வெந்தயம் மற்றும் 1 கைப்பிடி அளவு கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளுங்கள்.
அனைத்து பொருட்களும் நன்கு வதங்கியபிறகு அதனுடன் 20 பூண்டு பற்கள் மற்றும் 20 சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்கி விடுங்கள். இவையெல்லாம் நன்கு வதங்கியபின்னர் அதில் வதக்கி அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து மீண்டும் ஒருமுறை வதக்கிக் கொள்ளுங்கள்.

பிறகு அதனுடன் 1/4 டீஸ்பூன் மஞ்சள்தூள், 4 டேபிள் ஸ்பூன் தனியாத்தூள் மற்றும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்கவிடுங்கள். பின்னர் அதில் நாம் முன்னரே கரைத்துவைத்துள்ள புளிக்கரைச்சலை ஊற்றி நன்கு கொதிக்கவிடுங்கள்.
அதன் பிறகு இந்த மருந்து குழம்புக்கு தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு அடுப்பிலிருந்து இறக்கிக் கொள்ளுங்கள்.
இப்பொழுது நமது மருந்து குழம்பு தயார் ஆகிவிட்டது வாங்க சுவைக்கலாம். நீங்களும் இந்த மருந்து குழம்பை உங்கள் வீட்டில் செய்து சுவைத்துப்பாருங்கள்.

