
ராஷ்டிரிய ஜனதாதளத்தினரும், காங்கிரஸ் கட்சியினரும் வெளிநாட்டு ஊடுருவல்காரர்களைப் பாதுகாப்பவர்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.
பீகாரில் இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெறும் ஆராரியாவில் பாஜக தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது, வளர்ச்சியடைந்த இந்தியா என்னும் இலக்கை நோக்கி நடைபோட்டு வரும் நம் முயற்சிகளுக்கு ஒரு மாபெரும் சவாலாக ஊடுருவல்காரர்கள் விளங்குவதாகத் தெரிவித்தார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு வெளிநாட்டு ஊடுருவல்காரர்களை அடையாளங்கண்டு திருப்பி அனுப்பி வருவதாகவும், ஆனால் ராஷ்டிரிய ஜனதாதளத்தினரும், காங்கிரஸ் கட்சியினரும் வெளிநாட்டு ஊடுருவல்காரர்களைப் பாதுகாப்பவர்கள் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
ஊடுருவல்காரர்களைக் காப்பதற்காக அனைத்து வகையான முயற்சிகளையும் அவர்கள் எடுப்பார்கள் என்றும் குற்றஞ்சாட்டினார்.
காங்கிரசுக்கும் ராஷ்டிரிய ஜனதாதளத்துக்கும் நாட்டின் பாதுகாப்புக் குறித்துக் கவலையே இல்லை என்றும், அவர்கள் நம் மக்களின் நம்பிக்கையையும் பண்பாட்டையும் இழிவுபடுத்துவதாகவும் குற்றஞ்சாட்டினார்.
ஆர்ஜேடியின் காட்டாட்சிக் காலத்தில் தாழ்த்தப்பட்டோரும் மிகப் பிற்படுத்தப்பட்டோரும் பெரும் அடக்குமுறையை எதிர்கொண்டதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.


