
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பாஜக மாநில நிர்வாகியான வழக்கறிஞர் பால் கனகராஜ் விசாரணைக்கு நேரில் ஆஜராகச் சம்மன் அனுப்பி உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சினிமாவை மிஞ்சும் வகையில் தினமும் அதிர்ச்சி தகவல் வெளியாகி வருகிறது. இதுவரை கூலிப்படை கும்பல் தலைவன் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, வழக்கறிஞர் அருள் உள்பட 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக இந்த வழக்கில் திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் என முக்கிய பிரமுகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ரவுடி திருவேங்கடம் என்கவுண்டர் செய்யப்பட்டார்.

தொடர்ந்து வழக்கறிஞர்கள் அருள், ஹரிஹரன், பொன்னை பாலு உள்ளிட்டோர் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இளைஞர் காங்கிரஸ் கட்சியின் முதன்மை பொதுச்செயலாளராக இருந்த வழக்கறிஞர் அஸ்வத்தாமன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் வேலூர் மத்திய சிறையில் இருக்கும் பிரபல தாதா நாகேந்திரனின் மகன் ஆவார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் வழக்கு தொடர்பாகப் பாஜக வழக்கறிஞரும், வடசென்னை மக்களவை தொகுதியில் போட்டியிட்ட பால் கனகராஜ் செம்பியம் போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து காவல் நிலையத்தில் ஆஜராகியுள்ளார். கொலை வழக்கில் கைதான ரவுடிகள் நாகேந்திரன், சம்போ செந்தில் உள்ளிட்டோருக்கு வழக்கறிஞராகச் செயல்பட்டதால் பால் கனகராஜூக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.


