
கோவையில் ஒரே மேடையில் பல்வேறு மாநிலங்களின் கலாச்சார உடை அணிந்த நூற்றுக்கு மேற்பட்ட மணமகள்கள் நடைபயின்று வந்து பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினர்.
கோவை மேக்லுக் அழகியல் பயிற்சி மையத்தில் பயிற்சி முடித்த பெண்களுக்குச் சான்றிதழ் வழங்கும் விழா சாய்பாபா காலனியில் நடைபெற்றது.
இதில் ஒப்பனைத் துறையில் பயிற்சி முடித்த பெண்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் திருமணக் கோலத்தில் உள்ள மணமகளுக்குச் செய்யும் ஒப்பனைகளைச் செய்து காண்பித்தனர். தொடர்ந்து ஒப்பனைகளைச் செய்த மணமகள்கள் மேடையில் நடந்து அசத்தினர்.
பல்வேறு மாநிலக் கலாச்சார உடைகளுடன் திருமணக் கோலத்தில் உள்ள பெண் போல ஒப்பனை இட்டு மேடையில் பெண்கள் நடந்தது பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது.தொடர்ந்து சிறந்த ஒப்பனைக் கலைஞர்களுக்கு லண்டன் அகாடமி தலைவர் விஜய் சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கினார்.
முன்னதாகச் செய்தியாளர்களிடம் பேசிய ஒப்பனைக் கலைத் துறைப் பயிற்சியாளர் ரம்யா, தற்போது ஒப்பனைத் துறையில் தொழில் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகத் தெரிவித்தார்.




