
இந்தியா தற்சார்பு நாடாக மாறும் காலம் நெடுந்தொலைவில் இல்லை என்று ஏரோஸ்பேஸ் நிறுவனத் தலைவர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
கோவையில் ரோபோட்டிக்ஸ் ஆட்டோமேஷன் துறையில் கல்வி பயிலும் மாணவர்கள் நவீனச் செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பங்களை இணைத்துக் கற்று கொள்ளும் வகையில், புதிய ஆராய்ச்சி மேம்பாட்டுப் பயிற்சி மையம் குரும்ப பாளையம் ஆதித்யா தொழில் நுட்பக் கல்லூரியில் தொடங்கப்பட்டுள்ளது.
இதன் தொடக்க விழாவில் ரோபோட்டிக் நுட்பவியல் துறையில் இளம் மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து இந்திய ராக்கெட் ஏவுதளத்திற்குத் தேவையான தொழில்நுட்பக் களை தயார் செய்து வரும் கோவையை சேர்ந்த ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் தலைவர் பழனிச்சாமி பேசினார்.
அப்போது, இந்திய மாணவர்கள் ஆராய்ச்சிகளில் கூடுதல் கவனம் செலுத்தி வருவதாகக் கூறிய அவர், தொழில் நுட்ப அறிவியலில் இந்தியா மற்ற நாடுகளின் துணையின்றித் தற்சார்பு நாடாக வேகமாக மாறி வருவதாகத் தெரிவித்தார். இந்த விழாவில் ஆதித்யா தொழில் நுட்பக் கல்லூரி ஏ.ஐ.டி. மற்றும் கோட் ரோபோட்டிக்ஸ் நிறுவனங்கள் இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை கையொப்பமானது.
இந்த உடன்பாடு மாணவர்கள் கல்வி கற்கும்போதே தொழில்நுட்பங்கள் சார்ந்த திறன்களை வளர்த்துக்கொள்ள ஏதுவாக இருக்கும் எனக் கல்லூரி இயக்குநர் ஜோசப் தனிக்கல், டீன் ராஜேந்திரன் ஆகியோர் தெரிவித்தனர்.


