
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இதமான காலநிலையை அனுபவிக்கச் சுற்றுலாவுக்கு வந்த நிலை மாறிப் போதைக் காளான் தேடி வரும் சூழல் உருவாகியுள்ளதாகப் பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இயற்கை அழகைக் கண்டுகளிப்பதற்காகவும், குளிர்ச்சூழலை அனுபவித்து மகிழ்வதற்காகவும் வருகின்றனர்.
இந்நிலையில் அண்மைக்காலமாகப் போதைக் காளான், கஞ்சா, மெத்தப்பட்டையின் போன்ற போதைப் பொருள்களைக் கொடைக்கானலுக்குச் சுற்றுலா வரும் இளைஞர்கள் பயன்படுத்தி வருவது தெரிய வந்துள்ளது. இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் தீவிரமாகச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மேல்மலை ஊர்களில் போதைக் காளான்கள் பயிரிடுவதும் விற்பதும் தடுத்து நிறுத்தப்பட்டது. காளான் விற்போரைக் கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஒரு சில விடுதிகளை சீல் வைத்துள்ளனர்.
சுற்றுலா வரும் இளைஞர்கள் ஒரு சிலர் இதுபோன்ற போதைக்கு அடிமையாகி அடர்ந்த காட்டுப்பகுதியில் போதைக்காளான் தேடுவது, போதைப் பொருட்களைத் தின்பது போன்ற வீடியோக்களைச் சமூக வலைத் தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இதைத் தடுத்து நிறுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்வி பொதுமக்கள் இடையே எழுந்துள்ளது.

