
சீனாவை தாக்கிய சூறாவளி மற்றும் நிலச்சரிவில், 20 பேர் உயிரிழந்துள்ளனர். 300-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
ஆசியாவின் மிகப்பெரிய வல்லரசு நாடுகளில் ஒன்றான சீனாவில், கனமழை, பயங்கர நிலச்சரிவு மற்றும் கோரமான சூறாவளி காற்று என இயற்கை சீற்றத்தால், சீனாவின் வடமேற்குப் பகுதியான கன்சு மாகாணத்தில், லோங்னான் என்ற கிராமத்தில், அதிகாலையில் மக்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது.
இதில் வீடுகள் இடிந்து விழுந்ததில், 33 பேர் மண்ணோடு மண்ணாகப் புதையுண்டனர். உடனடியாக விரைந்து வந்த மீட்புக் குழுவினர் இடிபாடுகளுக்குள் இருந்த 21 பேரை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மீதமுள்ள 12 பேரை மீட்க தற்போதும் மீட்புக் குழு தீவிரமாகப் போராடி வருகின்றனர். இதற்கிடையே, ஹ_பெய் மாகாணத்தை தாக்கிய பயங்கர சூறாவளி, காற்றில், 11 பேர் உயிரிழந்தனர். ஒருவர் காணாமல் போயுள்ளார்.
இந்த சூறாவளியால் 4 ஆயிரத்து 800-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. இதேபோல், மேசக் புயல் காரணமாக, மற்றொரு பகுதியில் கொட்டித் தீர்த்த கனமழையால் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 54 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் அவசரமாக அப்புறப்படுத்தப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் ஒட்டுமொத்தமாக சீனாவில் 20 பேர் உயிரிழந்தனர். மேலும், 300-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
மக்களின் உயிரையும் உடைமைகளையும் காக்கப் போர்க்கால அடிப்படையில் அவசர மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை முடுக்கிவிடுங்கள் என்று சீன அதிபர் ஜின்பிங் அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவிட்டுள்ளார்.




