சென்னையில் “சம்மர் ஸ்பெஷல்” விடுமுறையை முன்னிட்டு 206 விமானங்கள் இயக்கம்

Advertisements

சென்னை விமான நிலையத்தில் கோடை விடுமுறை பயணிகள் கூட்டத்தை சமாளிப்பதற்காக, கோடை காலம் முழுவதிலும் 42 சர்வதேச விமானங்கள், 164 உள்நாட்டு விமானங்கள் மொத்தம் 206 விமானங்கள் “சம்மர் ஸ்பெஷல்” கோடை சிறப்பு விமானங்களாக இயக்கப்பட இருப்பதாக சென்னை விமான நிலையம் அறிவிப்பால், பயணிகள் மகிழ்ச்சி.நாடு முழுவதில்லை கோடை வெயில் சுட்டெரிக்க தொடங்கி உள்ளது. அதோடு கல்வி நிலையங்களில் தேர்வுகள் முடிந்து, கோடை விடுமுறைகளும் தொடங்குகின்றன. இதனால் கோடை விடுமுறையை ஜாலியாக கழிக்க வெளியூர்கள், வெளிநாடுகள் போன்றவைகளுக்கு சுற்றுலா செல்லும் பயணிகள், சொந்த ஊருக்கு செல்லும் பயணிகள் கூட்டங்கள், சென்னை விமான நிலையத்தில் அதிகரிக்க தொடங்கியுள்ளன.

சென்னை விமான நிலையத்தில் உள்நாடு மற்றும் சர்வதேச முனையங்களில் வழக்கமாக வருகை புறப்பாடுகள் பயணிகள் எண்ணிக்கை, நாளொன்றுக்கு சுமார் 50,000 ஆக இருந்தது, தற்போது அது 55 ஆயிரத்திற்கும் மேல் 60 ஆயிரத்தை நெருங்கிக் கொண்டு இருக்கிறது இதையடுத்து இந்திய விமான நிலைய ஆணையம், சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்படும் உள்நாடு மற்றும் சர்வதேச விமானங்களின் எண்ணிக்கைகளை அதிகரித்துள்ளது. சென்னை இலங்கை இடையே ஏர் இந்தியா விமான நிறுவனம் வாரத்தில் 7 விமானங்களை இயக்கி வந்தன. அது வாரம் 10 விமானங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதோடு ஸ்பைஜெட் நிறுவனம் சென்னை இலங்கை இடையே 7 விமான சேவைகளையும் புதிதாக தொடங்குகிறது. இலங்கையின் யாழ்ப்பாணம் நகருக்கு, மழைக்காலத்தில் மோசமான வானிலை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட அலையன்ஸ் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், கோடை சிறப்பாக, சென்னை- யாழ்ப்பாணம் இடையே வாரம் 7 விமான சேவைகளை தொடங்குகிறு.

இவைகள் தவிர சென்னை- குவைத் இடையே வாரத்தில் 5 விமானங்கள் இயக்கப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், இனிமேல் வாரத்தில் 7 விமானங்களும்,  சென்னை- மஸ்கட் இடையே வாரத்தில் ஒரு நாள் இயக்கப்பட்ட விமானம், இனிமேல் வாரத்தில் இரண்டு நாட்களும், சென்னை- தமாம் இடையே, வாரத்தில் 2 நாட்கள் இயக்கப்பட்ட விமானம், இனிமேல் 3 நாட்களும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதைப்போல் இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் வாரத்தில் 7 நாட்கள், சென்னை குவைத் இடையே விமான சேவையை புதிதாக தொடங்குகிறது. மேலும் ஓமன் ஏர்வேஸ் நிறுவனம், சென்னை- மஸ்கட் இடையே வாரத்தில் 11 விமானங்களை இயக்கியது, இனிமேல் 14 விமானங்களாகவும், சென்னை- பக்ரைன் இடையே கல்ஃப் ஏர்வேஸ் நிறுவனம் வாரம் 7 விமானங்களை இயக்கியது, இனிமேல் 10 விமானங்களாகவும், சென்னை- டாக்கா இடையே யூ எஸ் பங்களா ஏர்லைன்ஸ் நிறுவனம் வாரம் 3 விமானங்களை இயக்கியது, மேல் 11 விமானங்களையும் இயக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கோடை காலத்தில் சம்மர் ஸ்பெஷல் விமானங்களாக, மொத்தம் 42 புதிய சர்வதேச விமானங்கள் இயக்கப்பட உள்ளன. அதைப்போல் உள்நாட்டு விமானங்களில்,  ஏர் இந்தியா விமான நிறுவனம் சென்னை- பெங்களூர் இடையே தற்போது வாரத்தில் 12 விமானங்கள் இயக்கி வரும் நிலையில், இனிமேல் அது 23 ஆகவும், டெல்லிக்கு 70 விமானங்கள் இயக்கி வரும் நிலையில் இனிமேல் 77 விமானங்களாகவும், மதுரைக்கு 7 விமானங்கள் இயக்கி வரும் நிலையில், இனிமேல் 14 விமானங்களாகவும், மும்பைக்கு இயக்கப்படும் 42 விமானங்கள் 49 விமானங்களாகவும் ஏர் இந்தியா அதிகரித்துள்ளது.

அதைப்போல் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் கொச்சிக்கு இயக்கும் 2 விமானங்களை,14 ஆகவும், கவுகாத்திக்கு இயக்கும் 7 விமானங்களை, 21 விமானங்களாகவும், ஹைதராபாத்துக்கு இயக்கும் 7 விமானங்களை, 21 விமானங்களாகவும் வாரணாசி, நொய்டாவுக்கு 7 விமானங்களும் புதிதாக இயக்குகின்றன. அதைப்போல் இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் தூத்துக்குடிக்கு இயக்கும் 28 விமானங்களை 35 ஆகவும், திருச்சிக்கு இயக்கும் 46 விமானங்களை 49 ஆகவும், கொச்சிக்கு இயக்கும் 40 விமானங்களை 47 ஆகவும், அகமதாபாத்துக்கு இயக்கும் 27 விமானங்களை 28 ஆகவும் அதிகரித்து இயக்க முடிவு செய்துள்ளது.

அதைப்போல் ஸ்பைஜெட் விமான நிறுவனம், அயோத்தி, கொச்சி, ஹைதராபாத் மதுரை, தூத்துக்குடி, புனே சீரடி, சிவமுகா ஆகிய விமான நிலையங்களுக்கு கூடுதலாக, விமானங்களை இயக்க முடிவு செய்துள்ளது. இதைப்போல் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் சம்மர் ஸ்பெஷலாக, 164 விமானங்கள் கூடுதலாக இயக்கப்படுகின்றன. இதில் பல விமான சேவைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு நடந்து கொண்டு இருக்கின்றன. மற்ற விமான சேவைகள் படிப்படியாக, பயணிகள் கூட்டம் மற்றும் பயணிகளின் வரவேற்பை பொறுத்து கூடுதலாக இயக்கப்படும் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.சென்னை விமான நிலையத்தில் கோடை விடுமுறை பயணிகள் கூட்டத்தை சமாளிக்க, கோடை காலம் முழுமைக்கும் 42 சர்வதேச விமானங்கள், 164 உள்நாட்டு விமானங்கள் மொத்தம் 206 கோடை சிறப்பு விமானங்கள் இயக்கப்படுவதாக சென்னை விமான நிலையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது பயணிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *