அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா – நீதிமன்றத்தில் அதிரடி விசாரணை!

Advertisements

அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்ததை எதிர்த்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் 22-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.

சட்டமன்ற தேர்தலில் விராலிமலை, கரூர் தொகுதிகளில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தங்களுடைய பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, த.வெ.க.வில் இணைந்தனர். அவர்களுடைய ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டதை எதிர்த்து, அ.தி.மு.க.  கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

 

அந்த மனுவில், தகுதி நீக்க நடவடிக்கை நிலுவையில் இருக்கும் நிலையில், இருவருடைய ராஜினாமாவை  சபாநாயகர் ஏற்றுக்கொண்டது தவறு என்றும், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. சபாநாயகரின் முடிவு அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றும் விராலிமலை, கரூர் தொகுதிகள் காலியானதாக அறிவித்த விவகாரத்தில், மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்க இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

 

இந்த மனு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, இந்த மனு குறித்து பதிலளிக்கும்படி சட்டமன்ற செயலாளர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர் ஆகியோருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், ஏற்கனவே 4 சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமாவை ஏற்றதை எதிர்த்த வழக்குகளோடு சேர்த்து, இந்த வழக்குகளையும் ஜூலை 22-தேதி விசாரணைக்கு பட்டியலிட நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *