
சென்னையில் நடுரோட்டில் வழக்கறிஞர் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 3 பேர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.
சென்னை திருவான்மியூர் அவ்வை நகர் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் கௌதம். சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் திருவான்மியூர் தெற்கு நிழற்சாலை பகுதியில் உள்ள ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க வந்த வழக்கறிஞர் வந்துகொண்டிருந்தார். அப்போது திடீரெனப் பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்த கும்பல் நடுரோட்டில் கண்ணிமைக்கும் நேரத்தில் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பித்தனர்.
இதனையடுத்து ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் உயிரிழந்தார். பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரை உடலைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தக் கொலை தெதாடர்பாகப் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வந்தனர்.
இதனிடையே வழக்கறிஞர் கௌதம் கொலை வழக்கில் கண்ணகி நகர் கமலேஷ், கொட்டிவாக்கம் நித்தியானந்த், பெரும்பாக்கம் பார்த்திபன் ஆகியோர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.




