
அருப்புக்கோட்டையில் கட்டப்பட்டுள்ள ஸ்மார்ட் பேருந்து நிலையம் பிப்ரவரி 13ஆம் நாள் திறக்கப்பட உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் குறித்து வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் ஆலோசனை நடத்தினார்.
அருப்புக்கோட்டையில் உள்ள பழைய பேருந்து நிலையம் இடிக்கப்பட்டு அங்கு 12 கோடி ரூபாய் மதிப்பில் ஸ்மார்ட் பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்தப் பேருந்து நிலையத்தை பிப்ரவரி 13ஆம் நாள் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைக்க உள்ளார். அதற்கான ஏற்பாடுகள் குறித்து வருவாய்த் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் நகராட்சி நிர்வாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அருப்புக்கோட்டை நகராட்சிப் பகுதியிலும், ஊராட்சி ஒன்றியப் பகுதிகளிலும் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர், பிப்ரவரி மாத இறுதிக்குள் அனைத்துப் பணிகளையும் முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இதில் நகராட்சி அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள், வட்டார வளர்ச்சி அதிகாரிகள், திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



