
சி.பி.ஐ, சி.பி.சி.ஐ.டி. உட்பட முக்கிய புலனாய்வு அமைப்புகளில் பணிபுரிந்த மகேஷ்குமார் அகர்வால்.தமிழ்நாட்டின் புதிய டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். 1994-ஆம் ஆண்டு பேட்ச் தமிழ்நாடு கேடர் ஐ.பி.எஸ். அதிகாரி மகேஷ்குமார் அகர்வால். சி.பி.ஐ, சி.பி.சி.ஐ.டி. உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகளில் இருந்தார். தற்போது புதுடெல்லியில் எல்லை பாதுகாப்பு படை டி.ஜி.பி.யாக பணியாற்றி வருகிறார் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் மகேஷ்குமார் அகர்வால், தந்தை வழக்கறிஞர் என்பதால் சட்டம் படித்துவிட்டு, காவல்துறையில் நுழைந்தார். தன்னுடைய 22-வது வயதில் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று ஐ.பி.எஸ். அதிகாரியாக தனது பணியை தொடங்கினார்.
அதன் பின்னர், முக்கிய காவல்துறை பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார். குறிப்பாக, சேலத்திலிருந்து சென்னை வந்த ரெயிலில் ரூபாய் 5-கோடியே 78-லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில், மகேஷ்குமார் அகர்வால் தலைமையிலான சி.பி.சி.ஐ.டி. தான் கொள்ளையர்களை கைது செய்தது. மேலும், சென்னை சென்ட்ரல் ரெயில் நிலைய குண்டுவெடிப்பு, சென்னை பெண் என்ஜினியர் உமா மகேஸ்வரி கொலை போன்ற வழக்குகளில், ஐ.பி.எஸ். அதிகாரி மகேஷ்குமார் அகர்வால். திறம்பட விசாரணை நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




