
ஆட்சியைக் கவிழ்க்க சதி ? 15 பாஜக எம்.எல்.ஏ.க்கள் தற்காலிக நீக்கம்!
இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் பாஜகவைச் சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்களை தற்காலிக நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.
68 உறுப்பினர்களைக் கொண்ட இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் 40, பாஜ 25, சுயேச்சைகள் 3 இடங்களைப் பிடித்துள்ளனர். இதில் 3 சுயேச்சைகள் ஆளும் காங்கிரஸ் ஆட்சிக்கு ஆதரவாக உள்ளனர். இதனால், இமாச்சலப்பிரதேசத்தில் ஓர் உறுப்பினருக்கான மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் அபிஷேக் மனு சிங்வி எளிதாக வெல்வாரென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பெரும் திருப்பம் ஏற்பட்டது. மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்க நடந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 6 பேரும் சுயேச்சைகள் 3 பேரும் கட்சி மாறி வாக்களித்தனர்.
கட்சி மாறி வாக்களித்ததுடன் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 6 பேர் தலைமறைவாகி விட்டனர். இதனால் காங்கிரஸ் வேட்பாளர் சிங்வியும், பாஜ வேட்பாளர் ஹர்ஷ் மகாஜனும் தலா 34 இடங்களுடன் சம நிலையை அடைந்தனர். இதைத் தொடர்ந்து பெயரைக் குலுக்கி போட்டு வெற்றியாளரைத் தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டது. இதில் பாஜ வேட்பாளர் ஹர்ஷ் மகாஜன் வெற்றி பெற்றார். இதனால் இமாச்சலில் முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு ஆட்சியே கவிழும் நிலை ஏற்பட்டது. இதற்கிடையே சட்டமன்றத்தில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை இழந்துவிட்டதாகப் பாஜக புகார் தெரிவித்தது.
அவையில் பெரும்பான்மையை நிரூபிக்கக் காங்கிரஸ் கட்சிக்கு உத்தரவிட ஆளுநரைச் சந்தித்து கோரிக்கை விடுத்தது பாஜக. இதையடுத்து சட்டப்பேரவை தலைவர் அறையில் அமளியில் ஈடுபட்ட காரணத்தால் பாஜக எம்எல்ஏக்கள் 15 பேர்மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் ஜெய்ராம் தாகூர், ஜெய்ராம் தாகூர், விபின் சிங் பார்மர், ரன்தீர் சர்மா, லோகேந்தர் குமார் உள்ளிட்ட 15 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக அமைச்சரவையில் முக்கிய பங்கு வகித்து வந்த விக்ரமாதித்ய சிங் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவர் முன்னாள் முதல்வர் விர்பத்ரா சிங்கின் மகனாவார்.



