
பீகாரில் கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான 8 பேரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, நிவாரண தொகையை அறி்வித்துள்ளார். பீகார் மாநிலம் நாளாந்தா மாவட்டத்தில் உள்ள ஷீத்லா கோவிலில் சிறப்பு வழிபாட்டிற்காக நேற்று மாலை அதிகளவில் மக்கள் கூடி இருந்தனர்..
அப்போது திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர். 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. உயிரிழந்த அனைவரும் பெண்கள் என தெரியவந்துள்ளது.
உள்ளூர் மக்களின் உதவியுடன் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். கூட்டத்தை கட்டுப்படுத்த போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதா, இல்லையா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்த அம்மாநில தலைமைச்செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், நாளந்தாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணம் வழங்கப்படும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார். இந்த துயரமான சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் ஒன்றிய அரசு செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



