
திமுகவின் 5 ஆண்டு கால ஆட்சியில் 5 லட்சம் கோடி ரூபாய் கடன் சுமை ஏறியுள்ளதாக அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டினார். 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிவகாசி தொகுதி அதிமுக வேட்பாளர் கே.டி. ராஜேந்திர பாலாஜியை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.
அப்போது பேசிய அவர், அதிமுக மீண்டும் ஆட்சி அமைத்தால் தீப்பெட்டி, பட்டாசு தொழில்கள் பாதுகாக்கப்படும். காவிரி குண்டாறு திட்டம், மேட்டூர் அணை உபரி நீரை கால்வாய் வெட்டி ஏரிகள் குளங்கள் நிரப்பி, வேளாண்மைக்கு தேவையான நீர் கொடுக்கும் திட்டம் நிறைவேற்றப்படும்.
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிப்பதாகவும் குற்றம் சாட்டினார். திமுக அளித்த 525 வாக்குறுதிகளில் நான்கில் ஒரு பங்கு கூட நிறைவேற்றவில்லை என்று சாடிய அவர், 2021ம் ஆண்டு வரை ஒட்டுமொத்தமாக இருந்த கடன் 4 லட்சத்து 85 ஆயிரம் கோடி ரூபாய் என்றும் ஆனால் இந்த ஐந்தாண்டுகளில் 5 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கி நம் எல்லோரையும் கடனாளியாக்கிவிட்டதாக குற்றம் சுமத்தினார்.


