திமுக புதிய பொதுச்செயலாளர் ஆ.ராசா.? துரைமுருகன் அதிரடி முடிவு..!

Advertisements

திமுக பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து ஒதுங்கி கொள்ள துரைமுருகன் முடிவு எடுத்துள்ள நிலையில், புதிய பொதுச்செயலாளராக ஆ.ராசாவை நியமனம் செய்ய ஆலோசனை நடந்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆ.ராசாவுக்கு ஆதரவாக உதயநிதி ஸ்டாலினும் இருப்பதாக சொல்லப்படுகிறது.

சட்டசபைத் தேர்தலில் ஏற்பட்ட பலத்த தோல்வியைத் தொடர்ந்து, திமுகவை அடிமட்ட அளவில் இருந்து பலப்படுத்தவும், கட்சியின் கட்டமைப்பை முழுமையாக மாற்றியமைக்கவும் அக்கட்சித் தலைமை தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, கட்சியின் உள்கட்சி நிர்வாகத்தில் மிகப்பெரிய அதிரடி மாற்றம் அரங்கேறப் போவதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திமுகவின் மிக மூத்த தலைவரும், தற்போதைய பொதுச்செயலாளருமான துரைமுருகன் தனது கட்சிப் பொறுப்பில் இருந்து முழுமையாக ஒதுங்கிக் கொள்ள முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனைத் தொடர்ந்து தேர்தல் தோல்விக்குப் பின் கட்சியைப் புதிய உத்வேகத்துடன் வழிநடத்த, நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவை புதிய பொதுச்செயலாளராக நியமிக்க தீவிர ஆலோசனைகள் நடந்து வருகின்றன. ஆட்சியை இழந்த விரக்தியில் இருக்கும் திமுக தொண்டர்களிடையே புதிய எழுச்சியை ஏற்படுத்தவும், கட்சியின் தோல்விக்கு தார்மீகப் பொறுப்பேற்கும் விதமாகவும் இந்த மாற்றங்கள் திட்டமிடப்பட்டு வருகின்றன. கட்சியின் மூத்த முகமான துரைமுருகன், வயது மூப்பு மற்றும் தேர்தல் தோல்விக்குப் பிந்தைய தற்போதைய அரசியல் சூழலில் உள்கட்சிப் பணிகளில் தீவிரமாகச் செயல்பட முடியாத நிலை உள்ளது.

இதனை கருத்தில் கொண்டு, பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து துரைமுருகன் ஒதுங்கிக் கொள்ள விரும்புவதாகக் கூறப்படுகிறது. தோல்விக்குப் பின் கட்சியை மீண்டும் தடம் பதிக்க வைக்க, அடுத்த தலைமுறை மற்றும் சுறுசுறுப்பான தலைவர்களிடம் முக்கியப் பொறுப்புகளை ஒப்படைப்பதே சரி என்று திமுக தலைமை முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. துரைமுருகன் விலகும் பட்சத்தில், தேர்தல் தோல்வியால் சோர்ந்து போயிருக்கும் உள்கட்டமைப்பைச் சீரமைக்க ஆ.ராசா சரியான தேர்வாக இருப்பார் என திமுகவின் முக்கிய நிர்வாகிகள் கருதுகின்றனர்.

திராவிடக் கொள்கைகளை ஆழமாகப் பேசக்கூடிய ஆ.ராசாவை பொதுச்செயலாளராகக் கொண்டு வருவதற்கு உதயநிதி ஸ்டாலினும் முழு ஆதரவு தெரிவித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கனிமொழி தரப்பில் தென் மாவட்டங்களில் இருந்து ஒருவரை பொதுச்செயலாளராக நியமிக்கலாம் என்றும் ஆலோசனை கூறப்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் 60 வயதுக்கு மேற்பட்டவர்களை மீண்டும் திமுகவின் தலைமை பொறுப்புக்கு கொண்டு வர வேண்டாம் என்பதே உதயநிதி ஸ்டாலினின் கருத்தாக உள்ளது.

இளம் தலைமுறையினர் கவனிக்கும் வகையில் செயல்படக் கூடிய ஒருவரை பொதுச்செயலாளராக நியமிக்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் தீவிரமாக இருக்கிறார்.இதனால் கே.என்.நேரு, அப்பாவு உள்ளிட்டோர் பொதுச்செயலாளர் ரேஸில் இல்லை என்று தெரிகிறது. விரைவில் இதுதொடர்பாக முடிவு எடுக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *