
வங்கிகள் பெறும் கடனுக்கான வட்டி விகிதத்தை ஐந்தரை விழுக்காட்டில் இருந்து ஐந்தேகால் விழுக்காடாக இந்திய ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது.
பணக்கொள்கைக்கான குழு எடுத்த முடிவுகளை மும்பையில் இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா அறிவித்தார். அப்போது வங்கிகள் ரிசர்வ் வங்கியில் பெறும் கடனுக்கான வட்டி விகிதம் ஐந்தரை விழுக்காட்டில் இருந்து ஐந்தே கால் விழுக்காடாகக் குறைக்கப்படுவதாகத் தெரிவித்தார்.
அது மட்டுமல்லாமல் ஒரு இலட்சம் கோடி ரூபாய்க்கு அரசின் கடன் பத்திரங்களை வாங்கவும், டாலர் ரூபாய் வாங்கி விற்கும் முறையில் 500 கோடி டாலரை வாங்கவும் தீர்மானித்துள்ளதாகச் சஞ்சய் மல்கோத்ரா தெரிவித்தார்.
கடந்த ஆறு காலாண்டுகளில் இல்லாத அளவு அதிகமாக இந்த நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் 8 புள்ளி 2 விழுக்காடாக உள்ளதாகவும், இதனால் இந்த நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7 புள்ளி 3 விழுக்காடாக இருக்கும் என்று கணித்துள்ளதாகவும் ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா குறிப்பிட்டார்.



