
மாமதுரைக்குத் தேவை வளர்ச்சி அரசியலா? அல்லது வேறு அரசியலா? என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றத்தின் உச்சியில் உள்ள விளக்குத் தூணில் தீபம் ஏற்றலாம் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. இதை எதிர்த்த தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்ததுடன், மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த தடையுத்தரவையும் ரத்துச் செய்துள்ளது.
இதையடுத்து உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று தமிழக முதலமைச்சர் எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள பதிவில், மாமதுரைக்குத் தேவை வளர்ச்சி அரசியலா? அல்லது வேறு அரசியலா? என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் என்று தெரிவித்துள்ளார்.
மெட்ரோ இரயில், எய்ம்ஸ் மருத்துவமனை, புதிய தொழிற்சாலைகள், வேலைவாய்ப்புகள் இவைதான் மாமதுரையின் வளர்ச்சிக்காக அங்கு வாழும் மக்கள் கேட்பது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.



