
ஆத்தூர் அருகே சரக்கு ரயில் மோதியதில் கூலித் தொழிலாளி வலது கைத்துண்டான நிலையில் உயிரிழந்தார்.
இதுகுறித்து இரயில்வே போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அம்மம்பாளையம் அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரை மகன் சத்யராஜ் (32). இவர் வெல்டிங் பட்டரையில் கூலி வேலை செய்து வருகிறார்.
இவருக்குத் திருமணம் ஆகி ரேணுகா என்ற மனைவியும் இரண்டு பெண் ஆறு மாத ஆண் குழந்தையும் உள்ள நிலையில் இவர் நேற்று காலையில் வழக்கம்போல் வேலைக்குச் சென்றுவிட்டு மீண்டும் இரவு வீடு திரும்பிச் சென்றுகொண்டிருந்தார்.அப்போது அவர் ரயில் வருவதை அறியாமல் ரயில்வே தண்டவாளத்தைக் கடக்க முயன்றுள்ளார் அப்போது சேலத்திலிருந்து விருத்தாச்சலம் சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் அவரது முகம் பலத்த காயமடைந்து வலது கைத்துண்டான நிலையில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த சேலம் ரயில்வே போலீசார் இறந்தவரின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துப் பின்னர் இரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


