
இன்று தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடந்து வருகின்றது. இந்நிலையில் சேலத்தில் இரு முதியவர்கள் வெயிலின் காரணமாக மயங்கி விழுந்து இறந்துள்ளனர்.
இன்று தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற வருகின்றது. மக்கள் அனைவரும் ஆர்வமாக வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். சென்னையில் சில இடங்களில் செல் போனுடன் வாக்களிக்க வந்தவர்களைத் தேர்தல் அதிகாரிகள் திருப்பி அனுப்பியுள்ளனர். செல் போனை பூத்திற்கு வெளியே வைத்துவிட்டு வந்த பிறகே அவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.
சேலம் செங்கவல்லி அருகே 77 வயது மதிக்கத் தக்க சின்னப் பொண்ணு என்ற மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அதே போலச் சேலத்தில் பழனிசாமி என்ற 65 வயது முதியவரும் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெயில் சேலத்தில் அதிகம் உள்ள நிலையில், முதியவர்கள் வெளியில் குறைந்த பிறகு வாக்களிக்க வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
இன்று சேலத்தில் 100 டிகிரி F வெளியில் நிலவி வரும் நிலையில், முதியவர்கள் வெயில் தாழ்ந்த பிறகு வாக்களிக்க வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அதே நேரம் தேர்தல் ஆணையம், வாக்களிக்க வரும் முதியவர்களுக்குச் செய்திருக்கும் வசதிகளைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். சக்கர நாற்காலிகள், அனைத்து வாக்குப்பதிவு மையங்களிலும் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் வாக்களிக்க வரும் முதியவர்களுக்கு வரிசையில் முன்னுரிமை அளிக்குமாறு இளம் வாக்காளர்களைத் தேர்தல் ஆணையம் ஊக்குவித்து வருகின்றது. மாலை 6 மணிவரை நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. தண்ணீர், குளிர்ச்சியான ஆகாரங்களை இது போன்ற அதிக வெயில் உள்ள நேரத்தில் உட்கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். தமிழகத்தில் காலை 11 மணி நிலவரப்படு 24.37 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதிகபட்சமாகக் கள்ளக்குறிச்சியில் 26.58 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

