Asian Games 2023: கோலாகல தொடக்கம்!

Advertisements

கோலாகலமாகத் தொடங்கியது 19வது ஆசிய விளையாட்டுப் போட்டி…

கோலாகலமாகத் தொடங்கிய 19வது ஆசிய விளையாட்டுப் போட்டியைச் சீன அதிபர் ஜி ஜின்பிங் தொடங்கி வைத்தார். வண்ணமயமாகத் தொடங்கிய விழாவில் இந்திய ஆக்கி அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், உலக குத்துச்சண்டை சாம்பியன் லல்வினா போர்கோஹைன் ஆகியோர் இந்திய அணிக்குத் தலைமை தாங்கி அணிவகுப்பில் தேசிய கொடியை ஏந்தி சென்றனர்.

ஆசிய விளையாட்டுப் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுவது வழக்கம். கடந்த 2018-ம் ஆண்டு இந்தோனேசியாவின் ஜகர்த்தா மற்றும் பாலெம்பேங் நகரங்களில் ஆசிய விளையாட்டுப் போட்டி நடந்தது.இதனைத்தொடர்ந்து அடுத்த போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் கடந்த ஆண்டு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால் கொரோனா காரணமாக ஆசிய விளையாட்டுப் போட்டி ஓராண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டது.இந்நிலையில், 19வது ஆசிய விளையாட்டுப் போட்டி ஹாங்சோவ் நகரில் இன்று தொடங்கியது. அக்டோபர் 8ஆம் தேதிவரை போட்டிகள் நடைபெறுகிறது.இதில் ஆசியாவை சேர்ந்த சீனா, ஜப்பான், இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, ஈரான், கஜகஸ்தான் உள்ளிட்ட 45 நாடுகள் பங்கேற்றுள்ளன.

துப்பாக்கி சுடுதல், ஸ்குவாஷ், டென்னிஸ், டேபிள் டென்னிஸ், பளுதூக்குதல், மல்யுத்தம், குத்துச்சண்டை, நீச்சல், வில்வித்தை, தடகளம், கூடைப்பந்து, கைப்பந்து, கிரிக்கெட், வாள்சண்டை, ஆக்கி, பேட்மிண்டன், செஸ், ஜிம்னாஸ்டிக்ஸ், படகுபந்தயம், கராத்தே உள்ளிட்ட போட்டிகள் நடைபெறுகின்றன. சுமார் 12 ஆயிரத்து 500 வீரர்கள் பங்கேற்கின்றனர்.

கடந்த ஆசிய போட்டியில் 16 தங்கம் உள்பட 70 பதக்கங்கள் வென்று பதக்கப்பட்டியலில் 8-வது இடத்தை இந்தியா பிடித்தது. தற்போது நடைபெறும் ஆசிய போட்டியில் இந்தியா சார்பில் 655 வீரர் வீராங்கனை பங்கேற்கின்றனர்.

பொதுவாக ஆசிய விளையாட்டு போட்டிகளில் சீனா அதிக பதக்கங்களை வெல்லும். தற்போதைய ஆசிய விளையாட்டு போட்டியிலும் சீனா அதிக பதக்கங்களைக் குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசிய விளையாட்டுப் போட்டி தொடக்க விழா இன்று மாலை 5.30 மணிக்குக் கோலாகலமாகத் தொடங்கியது. ஹாங்சோவில் உள்ள தாமரைப்பூ வடிவிலான ஒலிம்பிக் ஸ்போர்ட்ஸ் சென்டர் ஸ்டேடியத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங் போட்டிகளைத் தொடங்கி வைத்தார். அப்போது பல்வேறு கண்கவர் நிகழச்சிகள் நடைபெற்றன.

அப்போது விழாவில் இந்திய ஆக்கி அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், உலக குத்துச்சண்டை சாம்பியன் லல்வினா போர்கோஹைன் ஆகியோர் இந்திய அணிக்குத் தலைமை தாங்கி அணிவகுப்பில் தேசிய கொடியை ஏந்தி சென்றனர்.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *