
பாரதத்தின் மாபெரும் கிராமிய விளையாட்டுத் திருவிழா என்ற பெருமையைப் பெற்றுள்ள ‘ஈஷா கிராமோத்வசம்’ திருவிழா கோவை ஆதியோகி முன்பு இன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது.
ஆகஸ்ட் முதல் வாரம் தொடங்கிய 15-வது ஈஷா கிராமோத்சவம் திருவிழாவில் சுமார் 60,000 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.
ஆண்களுக்கான வாலிபால் போட்டி, பெண்களுக்கான த்ரோபால் போட்டி, இருபாலாருக்குமான கபடி போட்டிகள் என 4 பிரதான போட்டிகளின் இறுதிப் போட்டிகள்இன்று காலை 9 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணிவரை ஆதியோகி முன்பு நடைபெற்றன.
இதில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, ஆந்திர பிரதேசம் ஆகிய 5 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரியிலிருந்து தேர்வாகியுள்ள அணிகளின் வீரர், வீராங்கணைகள் பங்கேற்று விளையாடினர்.
இப்போட்டிகளை காண்பதற்காகத் தமிழ்நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் ஈஷாவிற்கு இன்று வருகை தந்தனர். பிரதான விளையாட்டுப் போட்டிகளைத் தவிர்த்துப் பார்வையாளர்கள் பங்கேற்பதற்காக வழுக்கு மரம், உறியடி, கயிறு இழுக்கும் போட்டி, சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள், கோலப் போட்டி உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய போட்டிகள் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை நடைபெற்றன.
மேலும், கரகாட்டம், ஒயிலாட்டம், பொய் கால் குதிரையாட்டம் உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. அத்துடன் கிராமிய உணவு திருவிழாவும் நடைபெற்றது. தென்னிந்திய அளவிலான இறுதிப் போட்டிகளில் வெற்றி பெறும் அணிகளுக்குச் சத்குரு மற்றும் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் திரு. அனுராக் தாகூர், நடிகர் சந்தானம் ஆகியோர் கலந்துகொண்டு இறுதிப் போட்டியில் முதலிடம் பெற்ற அணிகளுக்குப் பரிசுகள் வழங்கிக் பாராட்டினர்.
இறுதிப் போட்டியில் முதலிடம் பெறும் வாலிபால் அணிக்கு ரூ. 5 லட்சம், த்ரோபால் அணிக்கு ரூ.2 லட்சம், ஆண்கள் கபடி அணிக்கு ரூ. 5 லட்சம், பெண்கள் கபடி அணிக்கு ரூ.2 லட்சம் என உற்சாகமூட்டும் பரிசு தொகைகளும், பாராட்டு கேடயங்களும் வழங்கப்பட்டன.


