
புதுடில்லி: டில்லி மாநகராட்சிக்கு நியமன உறுப்பினர்களை, மாநில அரசின் ஆலோசனை இல்லாமல் துணை நிலை கவர்னர் நியமிக்கலாமென உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இது ஆளும் ஆம் ஆத்மி அரசுக்குப் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
ஒத்திவைப்பு
டில்லி மாநகராட்சியில் 250 கவுன்சிலர்கள் மக்களால் தேர்வு செய்யப்படுகின்றனர். 10 பேர் துணை நிலை கவர்னரால் நியமிக்கப்படுகின்றனர். இந்த நியமன உறுப்பினர்கள் தொடர்பாக டில்லி கவர்னர் மற்றும் கெஜ்ரிவால் அரசு இடையே மோதல் ஏற்பட்டது. இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் பிஎஸ் நரஷிம்மா, பர்திவாலா ஆகியோர் கொண்ட அமர்வு , கடந்தாண்டு இந்த வழக்கை விசாரித்துத் தீர்ப்பைத் தேதிக்குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
சட்டப்பூர்வ அதிகாரம்
இன்று( ஆக.,05) நீதிபதி நரஷிம்மா தீர்ப்பை வாசித்தார். தீர்ப்பில் கூறியுள்ளதாவது: டில்லி மாநகராட்சிக்கு, மாநில அரசின் ஆலோசனை மற்றும் கருத்து கேட்காமல் டில்லி கவர்னர் நியமனம் செய்யலாம். உறுப்பினர்களை நியமிப்பது, சட்டப்பூர்வமான அதிகாரமே தவிர, நிர்வாக அதிகாரம் அல்ல. டில்லி மாநகராட்சி சட்டப்படி, 25 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாநகராட்சியில் அனுபவம் பெற்ற 10 பேரைக் கவர்னர் நியமனம் செய்யலாம். கவர்னருக்கான சட்டம் பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டது. இவ்வாறு அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.


