
தீபத்திருவிழா நிறைவடைந்ததையொட்டி அண்ணாமலையார் தீப மலையின் மீது உள்ள அவரது பாதத்தில் பிராயச்சித்த பரிகார பூஜை நடைபெற்றது.
பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாகவும்,நினைத்தாலே முக்தியளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா கடந்த நவம்பர் 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நவம்பர் 26ஆம் தேதி அதிகாலையில் அண்ணாமலையார் திருக்கோயிலின் உள்ளே பரணி தீபமும்,மாலை 6 மணிக்கு அண்ணாமலையார் திருக்கோயிலின் பின்புறம் உள்ள 2668 உயரமுள்ள அண்ணாமலையார் மலையின் மீது மகா தீபமும் ஏற்றப்பட்டது.இந்த மகா தீப தரிசனத்தினை காண 2500 பக்தர்கள் மலையின் மீது ஏற மாவட்ட நிர்வாகம் அனுமதியளித்தது.

கடந்த நவம்பர் மாதம் 26ஆம் தேதி 2668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் மலையின் மீது ஏற்றப்பட்ட மகா தீபம் 11 நாட்கள் காட்சியளித்தது.பின்னர் மகா தீபம் ஏற்றப்படும் தீப கொப்பரை சிறப்பு பூஜைகள் செய்து மலையின் மீது இருந்து கீழே இறக்கப்பட்டு அண்ணாமலையர் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டது.
குறிப்பாக திருவண்ணாமலையில் மலையையே சிவனாக காட்சியளிப்பதாகவும்,அடிக்கு 1008 லிங்கம் உள்ளதாக ஐதீகம். இதனால் இந்த ஆன்மீக பூமியில் பலரும் காலில் செருப்பு அணியாமல் உள்ளதும் குறிப்பிட தக்கது.

குறிப்பாக கார்த்திகை தீப திருவிழாவின் போது மலையின் மீது பக்தர்கள் சென்று வந்ததாலும், அவர்களின் காலடி தடத்தினால் எழுந்த தோஷங்களை நிவர்த்தி செய்யும் வகையில் அண்ணாமலையார் மலையின் மீது உள்ள அண்ணாமலையார் பாதத்திற்கு சிறப்பு பரிகார பூஜைகள் நடைபெற்றது. அண்ணாமலையார் கோவிலில் உள்ள கருவறையில் புனித நீருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு கோவில் ஊழியர்களால் மலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தீபமலையின் மீது உள்ள அண்ணாமலையார் பாதத்திற்கு மஞ்சள், பால், தயிர், சந்தனம், உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.அதனையடுத்து திருக்கோவிலில் இருந்து கொண்டு செல்லப்பட்ட புனிதநீர் அண்ணாமலையார் பாதத்தில் ஊற்றி சிறப்பு அபிஷேகமும் மற்றும் தீப ஆராதனைகள் நடைபெற்று பிராயச்சித்த பரிகார நிவர்த்தி தோஷ பூஜைகள் நடைபெற்றது.

