
பொது இடங்களில் போதை ஆசாமிகள் அத்துமீறி நடந்து கொள்ளும்போது பொதுமக்களிடம் சிக்கி தர்மஅடி வாங்கும் சம்பவங்களைக் கேள்விப்பட்டிருப்போம்.
இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் ஷீரடியை சேர்ந்த ஆசிரியை பிரியா லஷ்கரே என்பவர் புனேவில் பஸ்சில் பயணம் செய்துள்ளார். அப்போது பஸ்சில் போதையில் இருந்த வாலிபர் ஒருவர் பிரியா லஷ்கரேவிடம் அத்துமீறி நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆவேசம் அடைந்த பிரியா போதை வாலிபரைக் கன்னத்தில் அறைந்தார்.
அப்போதும் போதை வாலிபர் தகாத வார்த்தைகளால் பேசியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அந்த வாலிபரின் கன்னத்தில் பிரியா 25-க்கும் மேற்பட்ட முறை அறைந்தார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் பயனர்கள் பலரும் பிரியாவின் துணிச்சலை பாராட்டினர்.
ஒரு பயனர், என்ன ஒரு ஷாட்! இது ஒரு பெண்ணின் சரியான பதில். எல்லா பெண்களும் இவரிடமிருந்து ஏதாவது கற்றுக்கொள்ள வேண்டும் எனக் கூறியிருந்தார். மற்றொரு பயனர், பொது இடங்களில் துன்புறுத்தலுக்கு எதிரான தெளிவான செய்தியைக் கூறியுள்ளாரெனப் பதிவிட்டுள்ளார்.


