
தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என்று கர்நாடக முதல்- மந்திரி சித்தராமையா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 99-வது கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. அதில் கர்நாடகா, தமிழ்நாடு புதுச்சேரி மாநிலங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தின் முடிவில் இந்த மாதம் முழுவதும் (ஜூலை 31-ந்தேதி வரை) தினமும் தமிழகத்திற்கு ஒரு டிஎம்சி நீர் திறந்து விடக் காவிரி நீர் ஒழுங்காற்று குழு உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களின் வாதங்களைக் கேட்டபிறகு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் இன்று செய்தியாளர் சந்திப்பின்போது சித்தராமையா கூறியிருப்பதாவது, காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதாகக் கர்நாடகா அரசு முடிவெடுத்துள்ளது.
கர்நாடக அணைகளில் சராசரியை காட்டிலும் சுமார் 28 சதவீத நீர் குறைவாக உள்ளது. நீர் குறைவாக உள்ளதை காவிரி மேலாண்மை ஆணைய ஒழுங்காற்று குழு கூட்டத்தில் வெளிப்படுத்தினோம்.
ஆனால் காவிரி ஒழுங்காற்று குழு தினமும் 1 டி.எம்.சி தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளது. தற்போதுள்ள சூழலில் தினமும் 1 டி.எம்.சி தண்ணீர் திறப்பது சாத்தியமில்லை.
காவிரி ஒழுங்காற்று குழுவின் முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போதைக்கு கர்நாடக அணைகளுக்கு என்ன நீர்வரத்து உள்ளதோ அதைத் திறந்து விடுகிறோம்.
இதுகுறித்து வரும் 14ம் தேதி மாலை 4 மணிக்கு அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளார்.


