
தமிழ்நாடு அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமிக்கப்பட்டிருப்பதற்குத் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கண்டனம் தெரிவித்துள்ளார்.
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தனது சமூக வலைத் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தமிழ்நாடு அரசின் தில்லிச் சிறப்புப் பிரதிநிதியாக வெங்கடநாராயணா நியமிக்கப்பட்டிருப்பதைத் தேமுதிக சார்பில் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
கர்நாடகப் பின்னணியைக் கொண்ட ஒருவரைத் தமிழ்நாட்டின் தில்லி பிரதிநிதியாக நியமித்திருப்பது பொதுமக்களிடையே பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளதாகக் கூறியுள்ளார். தமிழக அரசு இந்த நியமனத்தை மறுபரிசீலனை செய்து, வெங்கட நாராயணாவின் நியமனத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இதேபோல் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகத் தில்லியில் ஒலிக்க வேண்டிய அரசு பொறுப்பில், ஒரு அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகத்தைச் சேர்ந்த ஒருவரை அமர்த்தியுள்ளது தவெக அரசு என்று குறிப்பிட்டுள்ளார்.
மேகேதாட்டு அணை கட்டும் விவகாரம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் உரிமை சார்ந்த பிரச்சனைகளில், தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஆள் தமிழ்நாட்டின் பிரதிநிதியாகச் செயல்படுவாரா? என்று வினவியுள்ளார்.


