
சான் பிரான்சிஸ்கோ: அருணாச்சல பிரதேசத்தை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக அங்கீகரித்து, அமெரிக்க பார்லிமென்ட் செனட்டர் குழு, தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
நம் நாட்டின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தை, தங்கள் நாட்டுக்கு உட்பட்ட பகுதியாக சீனா உரிமை கொண்டாடி வருகிறது. இந்த மாநிலத்தை ஸாங்னான் என்றழைக்கும் சீனா, அதை தெற்கு திபெத் என உரிமை கோருகிறது.
இந்த மாநிலத்திற்கு இந்திய அரசியல் தலைவர்கள், அதிகாரிகள் வருகை தருவதற்கு சீனா தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்தும் வருகிறது. சீனாவின் இந்த போக்கை, இந்தியா தொடர்ந்து நிராகரித்து வருகிறது.
இதற்கு வலுசேர்க்கும் விதமாக, அருணாச்சல பிரதேசத்தை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக அங்கீகரித்து அமெரிக்க பார்லிமென்ட் செனட்டர் குழு, நேற்று தீர்மானம் நிறைவேற்றியது.
செனட்டர்கள் ஜெப் மெர்க்லி, பில் ஹகேர்டி, டிம் கேய்ன் மற்றும் கிறிஸ் வான் ஹோலன் ஆகியோர் இந்த தீர்மானத்தை நேற்று முன்தினம் தாக்கல் செய்தனர்.
சீனா மற்றும் நம் நாட்டுக்கு சொந்தமான அருணாச்சலப் பிரதேசம் ஆகியவற்றுக்கு இடையிலான சர்வதேச எல்லையாக மெக்மஹோன் கோட்டை அமெரிக்கா அங்கீகரிக்கிறது என்பதை இந்தத் தீர்மானம் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
இந்த தீர்மானம், அமெரிக்க செனட் சபையின் முழுமையான ஓட்டெடுப்புக்கு அனுப்பி வைக்கப்படும்.
