L. Murugan: தாழ்த்தப்பட்ட சமூகத்தை அவமதித்துவிட்டார் டி.ஆர்.பாலு!

Advertisements

தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய மந்திரி தேவையான உதவிகள் செய்ய முன்வரவில்லை.டி.ஆர்.பாலுவுக்கும் மத்திய மந்திரி எல்.முருகனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

பாராளுமன்றத்தில் இன்று பட்ஜெட் மீதான விவாதக் கூட்டம் நடந்தது. இதில் தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு கலந்து கொண்டு பேசினார். தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு புயல் பேரிடர் நிவாரண நிதி வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதாக அவர் குற்றம்சாட்டினார்.

தமிழ்நாட்டிற்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய மந்திரி தேவையான உதவிகள் செய்ய முன்வரவில்லை என குற்றம்சாட்டி பேசினார். அப்போது மத்திய மந்திரி எல்.முருகன் குறுக்கிட்டு பேச முயன்றார்.

உடனே, நீங்கள் ஏன் தலையிடுகிறீர்கள். தயவு செய்து உட்காருங்கள். உங்களுக்கு என்ன வேண்டும். நீங்கள் பாராளுமன்ற உறுப்பினராக இருக்க தகுதியற்றவர். நீங்கள் அமைச்சராகவும் இருக்க தகுதியற்றவர் என எல்.முருகனை நோக்கி, டி.ஆர்.பாலு ஆவேசமாக பேசினார்.

அப்போது இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய இணை மந்திரி எல்.முருகன் மறுப்பு தெரிவித்து பேச தொடங்கினார். இதனால் டி.ஆர்.பாலுவுக்கும் மத்திய மந்திரி எல்.முருகனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

எல்.முருகனுக்கு ஆதரவாக பா.ஜ.க. எம்.பி.-க்கள் குரல் எழுப்பினர். இதனால் அவையில் கடும் கூச்சல்- குழப்பம் நிலவியது. டி.ஆர்.பாலுவை பேசவிடாமல் தடுத்தனர். அதைதொடர்ந்து டி.ஆர்.பாலு தலைமையில் தி.மு.க. எம்.பி.-க்கள், கூட்டணி கட்சி எம்.பி.-க்கள் வெளிநடப்பு செய்தனர்.

பாராளுமன்றத்தில் தி.மு.க.வுடன் நடந்த வாக்குவாதம்- மோதல் குறித்து மத்திய மந்திரி எல்.முருகன் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நான் அமைச்சராக இருப்பதை தி.மு.க.-வால் சகித்துக்கொள்ள முடியவில்லை. அதனால்தான் டி.ஆர்.பாலு எம்.பி. எனது சமூகத்தையும், என்னையும் அவமதிக்கும் வகையில் பாராளுமன்றத்தில் தரக்குறைவான வார்த்தையை பயன்படுத்தினார்.

சமூக நீதியை ஓட்டு வங்கிக்காக மட்டுமே தி.மு.க. பயன்படுத்துகிறது. பிரதமர் மோடி 10 ஆண்டுகளாக தலித் சமூகத்தை உயர்த்தும் வகையில் பல்வேறு உயர் பொறுப்புகளை வழங்கி பெருமைப்படுத்தி வருகிறார்.

தமிழ்நாட்டிற்கு ரூ.11 ஆயிரம் கோடி வளர்ச்சி பணிகளுக்கு வழங்கி உள்ளார். காசி சங்கமம் நிகழ்ச்சி நடத்தி தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்து உள்ளார். தமிழ்நாட்டு மக்கள் காசிக்கு வருவதற்கும் காசி மக்கள் இங்கு வருவதற்கும் தொடர்பை ஏற்படுத்தி உள்ளார்.

தமிழ்நாட்டின் செங்கோல் பாராளுமன்றத்தில் நிறுவி தமிழ்நாட்டிற்கு பிரதமர் மோடி பெருமை சேர்த்துள்ளார். தமிழ் கலாச்சாரம், பண்பாடு மீது பிரதமருக்கு மிகுந்த ஆர்வம் உள்ளது.

இவ்வாறு எல்.முருகன் கூறினார்.

மத்திய மந்திரி அர்ஜுன் ராம் மேக்வால் கூறுகையில், ”

டி.ஆர்.பாலு தான் அரசியலில் இருக்க தகுதியற்றவர். பாராளுமன்றத்தில் டி.ஆர்.பாலு நடந்துகொண்ட விதம் வேதனை அளிக்கிறது” என்றார்.

மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி கூறுகையில், “தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு தாழ்த்தப்பட்ட சமூகத்தை பற்றி பாராளுமன்றத்தில் பேசியதன் மூலம் அச்சமூகத்தையே அவமதித்து விட்டார். இது கண்டிக்கதக்கது” என்றார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *