
வக்பு வாரிய விவகாரத்தில் எதிர்க்கட்சியினர் தேசத்தை பிளவுபடுத்துகின்றனர் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விமர்சித்துள்ளார். வக்பு வாரிய சட்டத்தில் கடந்த 1995, 2013-ஆம் ஆண்டுகளில் திருத்தங்கள் செய்யப்பட்டன. இதில் மேலும் சில திருத்தங்களை கொண்டு வருவதற்கான மசோதாவை, மக்களவையில், மத்திய அரசு கடந்த 2024-ஆம் ஆண்டு ஆகஸ்டு 8-ஆம் தேதி தாக்கல் செய்தது. இந்த மசோதாவிற்கு, தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இதனையடுத்து, மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் ஆய்விற்கு அனுப்பப்பட்டது. நாடாளுமன்ற கூட்டு குழு பரிந்துரை செய்தபடி, மத்திய வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவில் திருத்தங்கள் செய்யப்பட்டு, மத்திய அமைச்சரவையும் அதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதனை தொடர்ந்து, நாடாளுமன்ற இரு அவைகளிலும் மசோதாவை நிறைவேற்ற, மத்திய அரசு தீவிரம் காட்டி வந்தது. இத்தகைய சூழலில், நாடாளுமன்றத்தில் வக்பு வாரிய மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மசோதா மீதான விவாதத்தின்போது, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மக்களவையில் உரையாற்றினார். அப்போது, வக்பு வாரிய விவகாரத்தில், இஸ்லாமியர்களை அச்சுறுத்தி வாக்கு வங்கி நடக்கிறது எனவும், வக்பு வாரிய நிர்வாகத்தில் இஸ்லாமியர் அல்லாதவர்கள் இருக்க மாட்டார்கள் எனவும், வக்பு வாரியங்களை மேற்பார்வையிடும் நிர்வாக பணியை மட்டும், அதிகாரிகள் செய்வார்கள் என்றும், வக்பு வாரிய சொத்து நிர்வாகத்தில் குளறுபடி செய்வோரை கண்காணிக்கும், பணியில் அதிகாரிகள் ஈடுபடுவார்கள் என்றும் தெரிவித்த அவர், வக்பு வாரிய விவகாரத்தில் எதிர்க்கட்சியினர் தேசத்தை பிளவுபடுத்துகின்றனர் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விமர்சித்துள்ளார்.



