
சென்னையின் 387-வது பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் தலைவர்களான ஸ்டாலின்,கனிமொழி, அன்புமணி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதனை சிறிய தொகுப்பாக காணலாம்.
1. சென்னையின் 387-வது ஆண்டு விழாவையொட்டி, முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், சென்னையை வளர்த்தெடுத்ததில் மகிழ்ச்சியும் பெருமையும் கொள்வதாக தெரிவித்துள்ளார். மேம்பாலங்கள், மெட்ரோ ரயில், பூங்காக்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2. சென்னை மாநகரத்தின் 387-வது பிறந்தநாளையொட்டி, திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி தனது சமூக வலை தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். எண்ணற்ற மக்களின் உழைப்பில் வளர்ந்த சென்னை, கோடிக்கணக்கானோரின் கனவுகளைத் தாங்கி நிற்பதாகவும், சகோதரத்துவம் மற்றும் பன்மைத்துவம் நிறைந்த சென்னையின் வரலாற்றை போற்றி பாதுகாப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
3. சென்னையின் 387-வது உருவாக்க நாளையொட்டி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தனது சமூக வலைதளப் பதிவில் சென்னை மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னையின் வளர்ச்சிக்கு இயற்கை வளங்கள் முக்கிய பங்காற்றுவதாக குறிப்பிட்ட அவர், பள்ளிக்கரணை சதுப்பு நிலம் ஆக்கிரமிப்பால் பத்தில் ஒரு பங்காக குறைந்துவிட்டதாக குற்றம்சாட்டினார். சதுப்பு நிலம் மற்றும் ஆறுகளை மீட்டெடுப்பதே சென்னை மக்களின் முக்கிய கடமை என்றும் தெரிவித்துள்ளார்.



