
எந்தவொரு தலைவரின் வற்புறுத்தலாலும் பாகிஸ்தான் மீதான ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையை இந்தியா நிறுத்தவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் கூறியுள்ள நிலையில், தனது வேண்டுகோளை ஏற்றுக்கொண்டே இந்தியாவும் பாகிஸ்தானும் போரை நிறுத்திக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தின் மக்களவையில் ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கை பற்றி உறுப்பினர்களின் விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்துக்குப் பதிலளித்துப் பேசிய பிரதமர் மோடி, பாகிஸ்தானுடனான பிரச்சனையில் மூன்றாம் நாட்டின் தலையீட்டை இந்தியா உறுதியாக நிராகரித்து விட்டதாகத் தெரிவித்தார்.
அதேபோல் அணுவாயுத மிரட்டலுக்கு இந்தியா அஞ்சவில்லை என்றும் குறிப்பிட்டார். இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில், இந்தியா தனது நட்பு நாடு என்றும், தன்னுடைய வேண்டுகோளை ஏற்றுக்கொண்டே இந்தியாவும் பாகிஸ்தானும் சண்டையை நிறுத்திக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.



