
திருப்புவனம் அருகே விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த அஜித்குமாரை போலீசார் தாக்கும் அதிர்ச்சி வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விசாரணை என்ற பெயரில் இளைஞர் அஜித்தை போலீசார் தாக்கும் வீடியோவை ஒருவர் மறைந்து இருந்து எடுத்துள்ளார். அந்த வீடியோவில் வலி தாங்க முடியாமல் அவர் கதறும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
இளைஞர் அஜித் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசு பல்வேறு கேள்விகளை நீதிமன்றம் முன்வைத்துள்ளது. மாஜிஸ்திரேட் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எajiன்றும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர், அஜித்தின் பிரேத பரிசோதனை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உயிரிழந்த அஜித்குமாரின் உடலில் 18 காயங்கள் கண்டறியப்பட்டதாக அவரது பிரேத பரிசோதனை அறிக்கையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. இடதுபக்க தோள்பட்டை முதல் முழங்கை மூட்டு வரையும், இடது பக்க விலாவிலும் கன்றிய காயங்கள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடதுபக்க இடுப்பு, வலதுபக்க பின் முதுகில் சிராய்ப்புகள் இருந்ததாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோயில் பின்புறம் நகைகளை ஒளித்து வைத்ததாகக் கூறப்படும் மாட்டுக்கொட்டகையில் காவல்துறையினர் விசாரணை நடத்தியதாகவும் அப்போது தப்பிக்கும் நோக்கில் அஜித்குமார் ஓடியதாகவும் கூறப்பட்டுள்ளது. ஓடியபோது கால் தவறி கீழே விழுந்ததாகவும் அப்போது அஜித்குமாருக்கு வலிப்பு ஏற்பட்டு, அவர் உயிரிழந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

