
அறிவியல், விண்வெளி, புத்தாக்கம் உள்ளிட்ட துறைகளில் இந்திய பெண்கள் குறிப்பிடத்தக்க பங்களித்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மத்தியில் ஆளும் பாஜக அரசு 12 ஆண்டுகள் நிறைவுசெய்தது, உலக மகளிர் நாள் ஆகியவற்றையொட்டிப் பிரதமர் நரேந்திர மோடி, சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில் அறிவியல், விண்வெளி, புத்தாக்கம் உள்ளிட்ட துறைகளில் இந்திய பெண்கள் குறிப்பிடத்தக்க பங்களித்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். டிரோன் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு புதிய துறைகளில் மகளிரின் பங்களிப்பு வளர்ந்து வருவது நாட்டின் வளர்ச்சிக்கான பரப்பையும் புதிய வாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
நிதியின் அடிப்படையில் பெண்களைச் சுதந்திரமானவர்களாக ஆக்குவதற்குத் தமது அரசு மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து வருவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில் பெண்களை முன்னிறுத்திய வளர்ச்சிக்குத் தமது அரசு பாடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கல்வி, நலவாழ்வு, தூய்மை, வீட்டுவசதி, விளையாட்டு, அறிவியல் ஆளுமை ஆகிய பல்வேறு துறைகளில் பெண்கள் குறிப்பிடத் தக்க பங்காற்றியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மகளிரின் கண்ணியம் காத்தல், அவர்களுக்கு வாய்ப்பளித்தல், அதிகாரமளித்தல் ஆகியவற்றின் மூலம் வலிமையான நாட்டைக் கட்டமைப்பதில் அவர்களின் பங்களிப்புக்குத் தேவையான சூழலை உருவாக்கத் தமது அரசு முயன்று வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.



