
சென்னை: தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த மூன்று வாரங்களாக சென்னை மட்டுமில்லாமல் பரவலாக தமிழ்நாடு முழுவதுமே காய்கறி உட்பட அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை என்பது கணிசமாக உயர்ந்து காணப்படுகிறது.
தக்காளி, சாம்பார் வெங்காயம், பீன்ஸ், கேரட் போன்ற அத்தியாவசிய உணவுக்கு பயன்படுத்தக்கூடிய காய்கறிகளும் அதே போன்று பருப்பு, எண்ணெய் வகைகளும் சற்று விலை உயர்ந்துள்ளது.
இந்நிலையில் இந்த விலையேற்றத்தை கண்டித்து இன்றைய தினம் அதிமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு மாவட்டங்களிலும் மாவட்ட நிர்வாகிகள் தலைமையில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர். உயரும் விலைவாசியை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கையை துரிதமாக எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து கண்டன கோஷங்களை ஆர்ப்பாட்டத்தில் எழுப்பி வருகின்றனர்.
சென்னையில் எழும்பூர் ஆர்.ஆர் ஸ்டேடியம் அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் 1,000 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் சென்னையில் இருக்கக்கூடிய அனைத்து மாவட்ட செயலாளர்களுடைய பங்கேற்போடும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
குறிப்பாக காய்கறிகளை மாலையாக அணிந்து கொண்டு எதிர்ப்பை பதிவு செய்யும் விதமாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுகவினர் ஈடுபட்டனர். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தி இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுக்க வேண்டும் என்பது இந்த ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கையாக இருக்கிறது.

