
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது மகனை அரசியலுக்குக் கொண்டு வர நாடகமாடுவதாகச் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் அதிமுக முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான சி.வி.சண்முகம் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அதிமுக தலைமை தன்னைச் சுயப்பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஒரு குடும்பத்தின் பிடியில் அதிமுக சிக்கிக் கொண்டு இருக்கிறது என்றும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது மகனை அரசியலுக்குக் கொண்டு வர நாடகமாடுவதாகவும் தெரிவித்தார்.
அதிமுக வென்ற 47 தொகுதிகளில் 31 தொகுதிகளில் வெற்றி பெற்றதற்குப் பாமகவே காரணம் என்று கூறினார். பாமக கூட்டணியில் இல்லை என்றால் அதிமுக வெற்றி பெற்றிருக்காது என்று சுட்டிக் காட்டினார். தன்னைச் சுற்றி ஜால்ரா அடிப்பவர்களை எடப்பாடி பழனிச்சாமி கூட வைத்திருப்பதாக விமர்சித்தார். கட்சியின் தோல்வி குறித்துச் செயற்குழுவை கூட்டாமல் எடப்பாடி பழனிச்சாமி அஞ்சுவது ஏன்? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
எம்ஜிஆரால் தொடங்கப்பட்ட இயக்கம் தற்போது ஆபத்தான் நிலையில் உள்ளது என்று கூறினார். தேர்தலின் படுதோல்வியைக் கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் வரை அறிந்துள்ளதால் பலரும் கட்சியை விட்டு விலகுவதாகத் தெரிவித்தார்.


