
ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா இடையான தடையற்ற வணிக உடன்பாடு இரு நாட்டு மக்களுக்கும் ஏராளமான வாய்ப்புகளை வழங்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்துடன் தடையற்ற வணிகம் செய்வதற்கான உடன்பாட்டில் இந்தியா கையொப்பமிட்டுள்ளது.
இந்தியாவக்கு வந்துள்ள ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்றானியோ லூயிஸ் சான்டோஸ், ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வாண்டர் லெயன் ஆகியோர் இந்த உடன்பாட்டில் கையொப்பமிட்டுள்ளனர். இது குறித்துப் பிரதமர் நரேந்திர மோடி தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றியுள்ளார்.
அதில் ஐரோப்பிய ஒன்றியமும் இந்தியாவும் மிகப்பெரிய உடன்பாட்டில் கையொப்பமிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த உடன்பாட்டால் இந்திய, ஐரோப்பிய மக்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார். உலகின் இருபெரும் பொருளாதாரச் சக்திகள் இடையான கூட்டுறவுக்கு இது மிகச் சிறந்த எடுத்துக்காட்டு என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ள நாடுகள் உலகின் மொத்த உற்பத்தியில் 25 விழுக்காட்டையும், உலக வாணிபத்தில் மூன்றில் ஒரு பகுதியையும் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். சட்டத்தின் ஆட்சி, ஜனநாயகத்தை நோக்கிய நமது கடப்பாட்டுக்கு இந்த உடன்பாடு அதிகாரமளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்துடனான இந்த வணிக உடன்பாட்டின் மூலம் உற்பத்தித் துறைக்கு ஊக்கமளிக்கப்படும் என்றும், சேவைத் துறை விரிவாக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் முதலீடு செய்யும் ஒவ்வொரு முதலீட்டாளரின் நம்பிக்கையையும் இது ஊக்குவிக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வாண்டர் லெயன் வெளியிட்டுள்ள செய்தியில், ஐரோப்பாவும் இந்தியாவும் இன்று வரலாறு படைத்துள்ளதாகவும், அனைத்து உடன்பாடுகளுக்கும் தயான தடையற்ற வணிக உடன்பாட்டில் கையொப்பமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
200 கோடி மக்களிடையே தடையற்ற வணிகத்துக்கு வகை செய்துள்ளதன் மூலம் அனைவரும் பயனடைவர் என்றும் தெரிவித்துள்ளார். இது ஒரு தொடக்கம்தான் என்றும், இதனால் நமது வணிக உறவு இன்னும் வலிமையாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.



