
மதுராந்தகம் அருகே தனியார் பேருந்தில் படிக்கட்டில் தொங்கி கொண்டு கல்லூரிக்குச் சென்ற மாணவர்கள்மீது கன்டெய்னர் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழனந்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் உள்ள மாலோலன் கலை அறிவியல் கல்லூரியில் ராமாபுரம், மோகல்வாடி ஆகிய கிராமங்களிலிருந்து பள்ளி கல்லூரி மாணவர்கள் படித்து வருகின்றனர். வழக்கம்போல் இன்று தனியார் பேருந்தில் கல்லூரிக்குப் படிக்கட்டில் தொங்கியவாறு வந்து கல்லூரி மாணவர்கள் பயணம் செய்துள்ளனர்.
அப்போது சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறுநாகலூர் என்ற இடத்தில் தனியார் பேருந்தைக் கண்டெய்னர் லாரி முந்த முயன்றபோது பேருந்தில் உரசியதில் மோனிஷ், கமலேஷ், தனுஷ், ரஞ்சித் உள்ளிட்ட 4 கல்லூரி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 5 கல்லூரி மாணவர்கள் காயமடைந்தனர். இந்த விபத்து தொடர்பாகப் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காயமடைந்த 5 பேரை மீட்டு மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், உயிரிழந்த 4 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காகச் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாகப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.


