
செங்கல்பட்டு அருகே விக்னேஷ் என்ற ஐடி ஊழியரை அவரது நண்பர்களே கொலை செய்து குழிதோண்டி புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் சீதக்காதி தெருவைச் சேர்ந்தவர் தங்கராஜ்(52). கேட்டரிங் வேலை செய்து வருகிறார். இவரது மகன் விக்னேஷ் (26). சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 11-ம் தேதி வெளியே சென்ற விக்னேஷ் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களிலும் குடும்பத்தினர் தேடியும் கிடைக்கவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த தந்தை தங்கராஜ் மகனைக் காணவில்லை என்று கடந்த 15ம் தேதி மறைமலை நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து மறைமலைநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் கோவிந்தாபுரம் ஏரி அருகே விக்னேஷ் நண்பர்களுடன் மது அருந்தியபோது தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது விக்னேஷ் எட்டி உதைத்ததால் கோபடைந்த விசு என்கிற விஸ்வநாதன் கத்தியால் வெட்டிக் கொலை செய்து விக்னேஷை உடலை ஏரியில் குழிதோண்டி புதைத்தது தெரியவந்தது.
இதனையடுத்து விக்னேஷின் நண்பர்களான கோகுலாபுரம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த விசு (23), கீழக்கரணை பிள்ளையார் கோவில் பகுதியில் வசித்து வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தில்கோஷ் குமார் (24), மற்றும் கோகுலாபுரம் பிள்ளையார் கோவில் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகியோர் கொலை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து கோகுலபுரம் பகுதியில் பதுங்கி இருந்த மூன்று பேரைக் கைது செய்து அவர்களிடமிருந்து கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களைப் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலை வழக்கில் கைதான குற்றவாளி விசு மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


