“90 மணி நேர வேலை” – L&T அளித்த விளக்கம்!

Advertisements

பணி நேரம் மற்றும் வாழ்க்கை முறை சார்ந்து L&T நிறுவன தலைவர்  எஸ்.என். சுப்பிரமணியன் பேசிய வீடியோ ஒன்று புயலை கிளப்பியுள்ளது. சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்ட அந்த வீடியோவில் அவர், “ஒவ்வொருத்தரும் 90 மணி நேரம் உழைக்க வேண்டும். நான் ஞாயிற்றுக் கிழமைகளிலும் பணியாற்றுகிறேன்,” என்று கூறினார்.

ஏற்கனவே இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி,  “இந்தியர்கள் 70 மணி நேரம் பணியாற்ற வேண்டும்,” என்று கூறியது பேசு பொருளானது. இந்த வரிசையில், தற்போது L&T தலைவர் 90 மணி நேரம் பணியாற்றுவது குறித்து தெரிவித்த கருத்துக்குப் பலரும் விமர்சனங்களை முன்வைக்கின்றனர். இந்த நிலையில், L&T தலைவர் கூறிய கருத்துக்கு, அந்நிறுவன செய்தி தொடர்பாளர் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து தனியார் செய்தி நிறுவனத்திடம் பேசிய L&T செய்தி தொடர்பாளர், “L&T நிறுவனத்தில், தேசத்தைக் கட்டியெழுப்புவதே எங்கள் முக்கிய நோக்கம் ஆகும். கடந்த எட்டு தசாப்தங்களுக்கும் மேலாக, இந்தியாவின் உள்கட்டமைப்பு, தொழில்கள் மற்றும் தொழில்நுட்ப திறன்களை நாங்கள் வடிவமைத்து வருகிறோம்.”

“இது இந்தியாவின் தசாப்தம் என்று நாங்கள் நம்புகிறோம், முன்னேற்றத்தை இயக்கவும், வளர்ந்த நாடாக மாறுவதற்கான எங்கள் பகிரப்பட்ட பார்வையை உணரவும் கூட்டு அர்ப்பணிப்பு மற்றும் முயற்சி தேவைப்படும் நேரம் இது.”

“எங்கள் L&T நிறுவன தலைவரின் கருத்துக்கள் இந்தப் பெரிய லட்சியத்தை பிரதிபலிக்கின்றன. அசாதாரண விளைவுகளுக்கு அசாதாரண முயற்சி தேவை என்பதை வலியுறுத்துகின்றன.

L&T நிறுவனத்தில் ஆர்வம், நோக்கம் மற்றும் செயல்திறன் நம்மை முன்னோக்கி நகர்த்தும் ஒரு கலாச்சாரத்தை வளர்ப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்,” என்று தெரிவித்தார்.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *