
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் மீண்டும் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதால் பல்லாயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
இதே பகுதியில் சமீபத்தில் தான் இரண்டு மிகப்பெரிய காட்டுத்தீ சம்பவங்கள் அரங்கேறிய நிலையில், தற்போது மீண்டும் காட்டுத்தீ பரவி வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
காஸ்டாயிக் ஏரியின் அருகில் உள்ள மலைப்பகுதியில் வேகமாகப் பரவிய காட்டுத்தீ கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்குள் 8 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டது.
பலத்த காற்று காட்டுத்தீயின் தீவிரத்தை அதிகப்படுத்த, அந்தப் பகுதி முழுக்க புகை சூழ்ந்து காணப்பட்டது. மேலும், தீ அதிக இடங்களுக்குப் பரவும் என்று தெரிகிறது.
புதிதாகப் பரவி வரும் காட்டுத்தீ காரணமாகச் சாண்டா கிளாரிட்டா அருகில் அமைந்துள்ள ஏரியைச் சுற்றி வசிக்கும் 31 ஆயிரம் பேரை வெளியேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
ஹியூஸ் தீ என்று அழைக்கப்படும் புதிய தீ விபத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள அனைவரும் உடனடியாக வெளியேற வேண்டும் என்று லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி ஷெரிப் துறையைச் சேர்ந்த ராபர்ட் ஜென்சன் வலியுறுத்தினார்.
ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்கள் சம்பவ இடத்தில் தண்ணீர் மற்றும் தீயை தடுக்கும் மருந்துகளைத் தீயில் ஊற்றிக்கொண்டிருந்தன.
லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி தீயணைப்புத் துறை மற்றும் ஏஞ்சல்ஸ் தேசிய வனப்பகுதியைச் சேர்ந்த குழுவினரும் தரையிலிருந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
