
கடலூரில் 19ம் ஆண்டு சுனாமி நினைவு தினத்தையொட்டி கடற்கரையில் பால் ஊற்றி, மலர்தூவி பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ந்தேதி சுனாமி பேரலை தாக்கியது. இதனால் கடலோர கிராமங்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டன.
கட லூர்மாவட்டத்தில் மட்டும் சுனாமி பேரலையில் சிக்கி 610 பேர் பலியாகினர்.இந்நிலையில் சுனாமி பேரலையால் பலியானவர்களின் 19 ம் ஆண்டு நினைவுத் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி கடலூர் முதுநகர் சிங்காரத்தோப்பில் உள்ள சுனாமி நினைவுத்தூணுக்கு சுனாமியில் பலியானவர்களின் உறவினர்கள் மலர் வளையம் வைத்தும், மலர்தூவியும் அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து தமிழ்நாடு மீனவர் பேரவை சார்பாக அதன் தலைவர் சுப்பராயன் தலைமையில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஊர்வலமாகச் சென்று கடற்கரையில் அஞ்சலி செலுத்தினர். அப்போது பெண்கள் கடலில் பால் ஊற்றியும் மலர்தூவியும், துக்கம் தாங்காமல் கதறி அழுதனர். கடற்கரை மணலில் மெழுகு வர்த்தி ஏற்றியும் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.


