
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிகவுக்குப் பத்துத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ஆம் நாள் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் அதிமுக – பாஜக உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி, திமுக – காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் என நால்முனைப் போட்டி நிலவுகிறது.
திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 28 தொகுதிகளும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் தலா 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவற்றுக்குத் தலா இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான உடன்பாடு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமையகத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், தேமுதிக பொருளாளர் பிரேமலதா ஆகியோர் முன்னிலையில் கையொப்பமானது.
தேமுதிகவுக்கு ஏற்கெனவே ஒரு மாநிலங்களவை உறுப்பினர் கொடுக்கப்பட்டுள்ளது. சுதீஷ் மாநிலங்களவை உறுப்பினராகியுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.



